கிராமப்புற இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) செயல்பட்டு வருகின்றன. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ஊரகவளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில், முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை தவிர 37 மாவட்டங்களிலும் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரியலூர், தூத்துக்குடி, திண்டுக்கல். தேனி. புதுக்கோட்டை. சிவகங்கை. ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படும் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் மட்டும் உண்டு உறையிட வசதியுடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி மையங்களில் வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான. குறிப்பாக செல்போன் பழுதுநீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுநீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி. பிளம்பிங் பயிற்சி, தச்சுபயிற்சி, இருசக்கர வாகன பழுதுநீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 18-45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதியாக குறைந்தது 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது, 8ஆம் வகுப்பு முதல், ITI, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன குறைந்தது 10நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை உள்ள பயிற்சிக் காலத்தின் போது மதிய உணவும், காலை மற்றும் மாலை வேலைகளில் சிற்றுண்டி மற்றும் தேனீர் போன்றவை இலவசமாக வழங்கப்படுவதுடன். பயிற்சியாளர்களுக்கு சீருடை பாடப்பொருட்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில்கருவிகள் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட சுய தொழில்குறித்து பயிற்சி அளிப்பதுடன் உகந்த தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில்திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், தொழில்முனைவோருக்கான சிறந்த பண்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட தொழில்முனைவோர் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட பயிற்சிகளுக்கு விளக்கப்பட காட்சிகள், தொழில் உபகரணங்களை பயன்படுத்துதல், கணினி வகுப்பு, மென்திறன்பயிற்சி மற்றும் செயல்முறை வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தொழிலில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதுமட்டுமன்றி பயிற்சியின் போது முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் வெற்றிகதைகள் நேரடியாக எடுத்துக் கூறப்படுகிறது. இளைஞர்களை குழுவாக அழைத்துச் சென்று சந்தை ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த இளைஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஏதுவாக இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி நிலைய அலுவலர்களால் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயிற்சி முடித்து இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில், வங்கிகள் மூலம் கடன்பெறவும் பயிற்சி நிலைய அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படும் பங்வேறு பயிற்சிகளுக்கான காலஅட்டவணை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில்பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெற விரும்பினால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் (முகவரி மற்றும் தொலைபேசி எண்: 9486471225) திட்ட இயக்குனர். தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம் (முகவரி மற்றும் தொலைபேசி எண்: 0461- 2341282) தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.
மேலும் விபரம் அறிய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண்: 155330 மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 8039 ஆகியவற்றை தொடர்புகொள்ளலாம். என்று மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.




