தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று ( ஜூன் 3 ) இரவு மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. இதனையடுத்து அப்பகுதியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று ( ஜூன் 4 ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 33 ஆண்டுகள் ஆகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், சாயல்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர், சேலம், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த புதிய பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ( ஜூன் 3,2025 ) இரவு பாண்டிச்சேரி, சென்னை, மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்துள்ளது. அதே வேளையில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், பேருந்து நிலையத்தின் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்ததால் பயணிகள் தற்போது புதிய பேருந்து நிலையத்தை பயன்படுத்த கலக்கமடைந்து இருப்பதாக தெரிகிறது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் புதிய பேருந்து நிலையத்தில், மேற்கூரை இடிந்து விழுந்த பகுதிகளை பார்வையிட்டதோடு, கட்டிடத்தின் உறுதி தன்மையையும் ஆய்வு செய்தனர்.

மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் வகையில் உடனடியாக புதிய பேருந்து நிலைய கட்டிடங்களை சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தினார்.




