தூத்துக்குடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 55 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தாளமுத்து நகர் பகுதியில் சந்தேகத்தின் பெயரில் கையில் பெரிய சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் குறுக்கு சாலையைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் முனியசாமி (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 55 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.



