தூத்துக்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மற்றொரு கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் கந்தவேல் மகன் அழகுமுருகன் (47). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று ( மே 19 ) காலை வழக்கம் போல் விஎம்எஸ் நகர் வடக்கு மீளவிட்டான் சாலையில் உள்ள தனது மளிகை கடையை திறந்த போது மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 10ஆயிரம் ரொக்கபணம் மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதே போல, நேற்று இரவு சின்னக்கண்ணுபுரம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். இது தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்தடுத்து திருட்டு, திருட்டு முயற்சி சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க காவல் துறையினர்களை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



