மிகவும் புகழ்பெற்ற 'மிஸ் கூவாகம்' அழகிப் போட்டி உளுந்தூர்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தேவதைகளை போல திருநங்கைகள் வந்து 'ரேம்ப் வாக்' நடந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்றது கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா. கூவாகம் திருவிழாவின் ஒரு பகுதியாக, அங்கே ஆண்டுதோறும் "மிஸ் திருநங்கை" போட்டி நடைபெறுவது வழக்கம். திருநங்கைகள் கலந்து கொள்ளும் இந்த அழகி போட்டியை காண தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில், நேற்று மிஸ் கூவாகம் அழகிப் போட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மிஸ் திருநங்கை 2025 போட்டியில் வெற்றி பெறுவதற்காக, பல பகுதிகளில் இருந்து வந்த திருநங்கைகள், பல வகை ஆடைகளை அணிந்து வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் 15 நபர்களும், இரண்டாவது சுற்றில் 7 நபர்களும், இறுதியாக மூன்று நபர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். அதில், தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி முதல் பரிசையும், சென்னையைச் சேர்ந்த ஜென்யா இரண்டாம் பரிசையும் விபாஷா மோகன் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.



