தூத்துக்குடி அருகே மதுபோதையில் ஏற்பட்ட மோதலில், கட்டிட தொழிலாளியை கட்டையால் தாக்கி படுகொலை செய்த சக தொழிலாளியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (55). இவரும், புதுக்கடை பகுதியைச் சேர்ந்த சந்திரன் (55) என்பவரும் தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடப்பு நடுத்தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். இவர்களுடன் மேலும் இரண்டு தொழிலாளர்களும் அதே வீட்டில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்துள்ளனர்.
நேற்று இரவு பணி முடிந்ததும் நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது போதையில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே, மனோகரன் அங்கிருந்து விலகி அருகில் கட்டப்பட்டு வரும் ஒரு புதிய கட்டிடத்திற்குள் சென்று உறங்கியுள்ளார்.
ஆத்திரத்தில் இருந்த சந்திரன், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனோகரனை மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மனோகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இன்று காலை மற்ற இரு தொழிலாளர்கள் எழுந்து பார்த்தபோது, மனோகரன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
தலைமறைவாக இருந்த சந்திரனைத் தேடி வந்த போலீசார், அவரை கைது செய்தனர். மதுபோதையில் நண்பரையே கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.