தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,400 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கல்லூரணி கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாகக் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவினர் இன்று அதிகாலை கல்லூரணி கடற்கரைச் சாலையில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் கடற்கரைக்குச் செல்லும் பாதையில் சோதனை செய்தபோது, ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான ஓரிடத்தில் ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அந்த மூட்டைகளைப் பிரித்துச் சோதனையிட்டதில், அவை அனைத்தும் இலங்கைக்குக் கடத்துவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 35 கிலோ எடை கொண்ட மொத்தம் 40 மூடைகள் அங்கு பதுக்கப்பட்டிருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட 1,400 கிலோ பீடி இலைகளும் உடனடியாகக் குளத்தூர் காவல் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 50 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகச் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்தப் கடத்தல் சம்பவத்தில் பின்னணியில் இருப்பவர்கள் யார்? கடத்தல்காரர்கள் எங்கிருந்து இந்த இலைகளைக் கொண்டு வந்தனர்? என்பது குறித்துக் க்யூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.