தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சட்டமன்றத் தேர்தல் அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வது நமது கடமையாகும். தேர்தல் நடத்தை விதிகள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதால், மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
மாவட்டத்தில் துப்பாக்கி உள்ளிட்ட படைக்கலன்களை வைத்திருக்க உரிமம் பெற்றுள்ள நபர்கள், தங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட படைக்கலன் பாதுகாப்பு கிடங்குகள் ஆகியவற்றில் ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

