தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாயர்புரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தனராஜ் என்பவரது மகன் கணேஷ் குமார் (27). கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டையில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார்.
இரவு 11 மணியளவில், தேரி சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் தும்பு ஆலை அருகே கணேஷ் குமார் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகச் சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரெனப் பாய்ந்துள்ளது. அப்போது பைக் மாட்டின் மீது பயங்கரமாக மோதியதில், நிலைதடுமாறி கணேஷ் குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சாயர்புரம் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீசார், கணேஷ் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக உயிரிழந்தவரின் தந்தை தனராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், சாயர்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
