தூத்துக்குடி கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த பீடி இலைகள் மூடைகளை போலீசார் கைப்பற்றினர்.
தூத்துக்குடி கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூபிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், அவரது தலைமையிலான உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சி ராஜா ஆகியோர் அடங்கிய காவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, இன்று (06.03.2026) அதிகாலை சுமார் 03.00 மணியளவில், தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடற்கரைக்குச் செல்லும் பாதையில் க்யூபிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த TATA 407 (பதிவு எண்: TN 72 Y 4501) என்ற லோடு வேனை போலீசார் சோதனையிட்டனர்.
போலீசாரைக் கண்டதும் வாகனத்தில் இருந்த மர்ம நபர்கள் இருட்டில் தப்பியோடிவிட்டனர். அந்த வாகனத்தை சோதனையிட்டபோது, தலா 30 கிலோ எடை கொண்ட 44 மூட்டைகளில் பீடி இலைகள் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த பீடி இலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ. 40 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 44 பீடி இலை மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேன் ஆகியவை மேல் விசாரணைக்காக சுங்கத்துறை (Customs Department) வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. தப்பியோடிய கடத்தல் காரர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



