தூத்துக்குடி அருகேயுள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பிற்குள் சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதூர் பாண்டியாபுரம் கிராமத்தின் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன்செல்வம். இன்று இவரது வீட்டின் சமையலறைக்குள் எதிர்பாராத விதமாக சுமார் 6 அடி நீளம் கொண்ட பெரிய சாரைப்பாம்பு ஒன்று நுழைந்தது. வீட்டை விட்டு வெளியேறிய குடும்பத்தினர், உடனடியாக வீட்டின் கதவைப் பூட்டி பாதுகாப்பாக நின்றனர்.
இது குறித்து உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, உபகரணங்களைப் பயன்படுத்தி அந்தப் பாம்பைப் பாதுகாப்பாக மீட்டனர். பிடிபட்ட பாம்பு குடியிருப்புப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டு, அருகிலுள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
பாம்பைப் பிடித்து உயிர்ச் சேதம் ஏதுமின்றி மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு, பொன்செல்வத்தின் குடும்பத்தினரும் அப்பகுதி பொதுமக்களும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் நிலவிய பதற்றம் தணிந்து, மக்கள் நிம்மதியடைந்தனர்.




