தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, புதிய ரயில்களை இயக்கவும், தற்போதுள்ள சேவைகளை நீட்டிக்கவும் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் எல். முருகனிடம் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் பிரம்மநாயகம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தற்போது வாரம் இருமுறை மட்டுமே இயக்கப்படும் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் (16765-16766) ரயிலை, பயணிகள் வசதிக்காக தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.
மும்பை லோக்மான்யா திலக் - மதுரை (22101-22102) விரைவு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி - கன்னியாகுமரி (56707-56708) ரயில் மற்றும் திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - விருதுநகர் (56831-56833 / 56832-56834) ரயில்களைத் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
தூத்துக்குடி - சென்னை இடையே பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் அதிநவீன வந்தே பாரத் ரயிலை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும்.
தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயங்கும் பாலருவி விரைவு ரயிலில் (16791-16792) குளிர்சாதன பெட்டிகளை இணைக்க வேண்டும்.
முன்னதாக, தூத்துக்குடி மற்றும் ஹைதராபாத் இடையே புதிய வாராந்திர ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டதற்காக மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துளது.
இந்த மனுவின் நகல்கள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரும் முன்னேற்றம் காணும் எனப் பயணிகள் நலச்சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.




