• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் மோதல்: வட்டாட்சியர் முன்னிலையில் சமாதானம் - வழக்கை திரும்பப் பெற முடிவு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், கடந்த வாரம் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் முறையிட்டனர். இதன் அடிப்படையில், தட்டார்மடம் காவல்துறையினர் ஐந்து மாணவர்கள் மீது பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், இந்த வழக்கைத் திரும்பப் பெறக் கோரி அவர்களது பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.


இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண, சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் வேலம்மாள், துணை வட்டாட்சியர் கணேஷ்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, மண்டல நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இருதரப்பினரும் பேசி சமாதானமாகப் போவதென்றும், காவல் துறையில் பதியப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


பள்ளியில் மோதல் நடந்தபோது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்காத மூன்று ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி பதற்றத்தை உருவாக்கக் கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கூட்டத்தை நடத்த பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் ஒளிருமா தீபம்? தட்டார்மடம் பகுதியில் முருக பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

  • Share on