திருச்செந்தூர் கடலில் புனித நீராடியபோது தவறவிட்ட சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியை மீட்டெடுத்து, உரியவரிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் தொழிலாளியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ மணிகண்டன் - ஷர்மிளா தம்பதியினர், கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்திருந்தனர். கடலில் புனித நீராடியபோது, மணிகண்டன் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலி எதிர்பாராதவிதமாக அலையில் சிக்கி கடலுக்குள் விழுந்தது. வெகுநேரம் தேடியும் சங்கிலி கிடைக்காததால் கவலையடைந்த தம்பதியினர், இது குறித்துத் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையம் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினரிடம் புகார் அளித்துவிட்டுத் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.
இதனைத் தொடர்ந்து, கடலோரப் பாதுகாப்புக் குழுத் தலைவர் சிவராஜா தலைமையிலான குழுவினரும், உள்ளூர் சிப்பி எடுக்கும் தொழிலாளர்களும் இணைந்து கடலில் தீவிரமாகத் தேடினர். அப்போது, மனோ என்ற சிப்பி அரிக்கும் தொழிலாளியின் கையில் அந்தத் தங்கச் சங்கிலி கிடைத்தது.
சங்கிலி மீட்கப்பட்ட தகவல் குறித்து மணிகண்டனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் திருச்செந்தூர் வந்தடைந்ததும், கோயில் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜன் முன்னிலையில் அவரது நகையிடம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகையை நேர்மையுடன் ஒப்படைத்த தொழிலாளி மனோவுக்கு, ஆய்வாளர் கனகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தேடுதல் பணியில் துரிதமாகச் செயல்பட்ட கடலோரப் பாதுகாப்புக் குழுவினருக்கும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.



