தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளில் தொடர்புடைய இரண்டு நபர்களை, தமிழக தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (26), போக்சோ (POCSO) வழக்கில் சம்மந்தப்பட்ட இசக்கிமுத்து (45), இந்த இருவரின் குற்றப் பின்னணி மற்றும் சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்கும் செயல்களைக் கருத்தில் கொண்டு, அவர்களைத் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சொர்ணராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள்விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று (08.02.2026) தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.




