2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்புகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, மொத்தம் 957 நியாயவிலைக் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கத் தொகை ரூ. 3,000 இந்தப் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 5,41,007 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
வரும் ஜனவரி 8, 2026 (08.01.2026) முதல் இந்த விநியோகம் தொடங்குகிறது. குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாயவிலைக் கடைக்குச் சென்று, தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் ஏதேனும் முறைகேடுகள், புகார்கள் அல்லது குறைகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
புகார் எண்: 0461 - 2341471
பொதுமக்கள் எந்தவித சிரமமுமின்றி பரிசுத் தொகுப்பைப் பெறுவதை உறுதி செய்ய அனைத்து விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.




