பாஞ்சாலங்குறிச்சியில் மயான பாதை படுமோசமாக உள்ளதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில், சந்ததியர் குடியிருப்பு மக்களுக்கு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை பின்புற பகுதியில் உள்ள மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மயானத்திற்கு செல்வதற்கு தார் சாலை வசதி இல்லாமல், வெறும் மண் பாதை மட்டுமே உள்ளதால் மழை காலங்களில் அந்த மண்பாதைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக பல மாதங்கள் இருக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால், இறந்தவர்களின் சடலத்தை சேறும் சகதியுமான பாதையின் வழியாக சென்று கிராமக்கள் அடக்கம் செய்கின்றனர்.
தாங்கள் தொடா்ந்து இது போன்ற இன்னல்கள் அடைந்து வருவதால் இறப்பிலும் நிம்மதியின்றி தவித்து வருவதாக பாஞ்சாலங்குறிச்சி சந்ததியர் குடியிருப்பு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பாஞ்சாலங்குறிச்சி சந்ததியர் குடியிருப்பு பொதுமக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு செல்லும் பாதையை சரி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




