தூத்துக்குடியில் கோவில் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு போன்ற பூஜை பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 18.10.2025 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து கோவிலில் உள்ள வெண்கல மணி, கோவில் குத்துவிளக்கு, வெண்கல தட்டு உள்ளிட்ட ரூபாய் 20,000 மதிப்புள்ள பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா இன்று (22.10.2025) அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துக்குமார் மகன் கருப்பசாமி (19), கருப்பசாமி மகன் பாலவிக்னேஷ் (22) மற்றும் மாரிமுத்து மகன் முகேஷ் (20) ஆகியோர் மேற்படி கோவிலின் பூட்டை உடைத்து பூஜை பொருட்களை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் உடனடியாக மேற்படி 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த வெண்கல மணி, வெண்கல தட்டு, குத்து விளக்கு போன்ற ரூபாய் 20,000 மதிப்புள்ள பூஜை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



