தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா கோலாகலமாக நடக்கிறது. இதனை முன்னிட்டு வரிசையாக பக்தர்கள் செல்வதற்கு தடுப்புக் கம்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழா கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டும் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா இன்று ( 20ஆம் தேதி ) நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவில் முகப்பு பகுதியில் பந்தல் போடப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசைகள் நின்று பெருமாளை வழிபட செல்லும் வகையில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5 மணிக்கு கோபூஜை, விஸ்வரூப தரிசனம் பின்னர் வைகுண்டபதி பெருமாளுக்கு சத்தியநாராயணர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சத்திய நாராயணர் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்து, சிறப்பு பூஜைகள், தீபாரணைகள் நடந்தது, பின்னர் திருப்பாவாடை, தளிகை நடக்கிறது.

புரட்டாசி சனிக்கிழமை விழாவில் பெருமாளை வழிபட ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்கள் சிரமமின்றி எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் காலை முதல் இரவு வரை வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள், கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, தலைமை அர்ச்சகர் வைகுண்ட பெருமாள் மற்றும் கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்துள்ளனர்.



