தூத்துக்குடி அருகே உள்ள கீழ கூட்டுடன்காடு மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து மக்கள் புதுக்கோட்டைக்கு செல்வதற்கு இடையே கடக்கும் தடை செய்யப்பட்ட சாலையில் மின்கம்பங்கள் மற்றும் பாதை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கீழ கூட்டுடன்காடு மற்றும் சுற்றுபுற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
"எங்கள் பகுதியான அய்யனார் காலனி, அய்யனார் காலனி கீழ் பகுதி, ராஜீவ் நகர், ஐயப்ப நகர், யூகோ நகர், கீழ கூட்டுடன் காடு மற்றும் சில பகுதிகளும் அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் என அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் பேருந்து, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மூலப்பொருள் எடுத்து செல்லவும், விளை பொருட்களை கொண்டு வரவும் பல்வேறு தேவைகளுக்கும், இறந்தவர்கள் உடலை மயானத்திற்கு கொண்டு செல்லவும், கோவில் திருவிழாவின்போது சாமி வீதி உலா சென்று வரவும் தேசிய நெடுஞ்சாலையை ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்தோம்.
மேற்படி எங்கள் பகுதி மக்கள் கடக்கும் பகுதியில் கடந்த 2023ல் பாலம் அமைக்கப்பட்டு நாங்கள் கடந்து செல்லும் பகுதியில் பாலத்தில் வாகனங்கள் ஏறுவதற்கு அதிக வேகத்தில் செல்ல வேண்டிய இடமாகவும், பாலத்தில் இருந்து வேகமாக இறங்கும் இடமாகவும் மேற்படி பாலம் அமைக்க பட்டுவுள்ளது. மேற்படி அபாயகரமான இடத்தின் வழியே எங்கள் பகுதி மக்கள் கடந்தும் வந்தனர்.
மேற்படி இடம் மிகவும் அபாயகரமான இடமாகவும் அதிக வேகத்தில் வாகனங்கள் கடந்தும் வந்ததால் மேற்படி அப்பகுதியில் பல விபத்துக்கள் ஏற்பட்டு அதனால் விபத்து மரணங்கள் அதிகமானது. அதனால் பல நாங்கள் கடக்கும் பகுதியில் வெளிச்சமான மின்கம்பங்கள் அமைத்து தரவும், சுரங்க பாதை அமைத்து தர வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, திட்ட அமலாக்க பிரிவு அதிகாரியிடம் மனு அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், தற்பொழுது மேற்படி நாங்கள் கடக்கும் பகுதியில் சாலையை கடக்க முடியாதவாறு நேற்று இரவோடு இரவாக தடுப்புகள் அமைக்கபட்டுள்ளது. இதனால் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டும் என்பதால், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல் சாலையின் குறுக்கே பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் நடந்து கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி பெரிய விபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் நாங்கள் எங்களது தேவைக்கும் அவசர காலத்தில் மருத்துவமனை, பேருந்து, பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் விவசாயம், திருவிழாக்கள், மயானம் செல்ல போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஆண்டாண்டு காலமாக பயன்படுத்திய பகுதியில் மேற்படி தேசிய நெடுஞ்சாலையில் பாதை அமைத்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.




