தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ். இவர் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் காதல் விவகாரம் தொடர்பாக அவரை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வைத்து இளம் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்தார். இந்த நிலையில் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோர், உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சரவணனுக்கும், கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது காவல்துறையினர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து சரவணன், மற்றும் கிருஷ்ணகுமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்
ஆனால், இருவரையும் கைது செய்தால் மட்டுமே, கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவின் ஆவணக் கொலை வழக்கு தொடர்பாக சுர்ஜித் தந்தையான உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்




