தூத்துக்குடியில் இளைஞா் ஒருவரை வெட்டி கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ராம்தாஸ்நகர் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் கார்த்திக் (27).தொழிலாளி. இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (25) என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு திடீரென போலீசார் வந்தனர்.
இதனால், ராஜபாண்டி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். இந்த நிலையில் திடீரென அங்கு போலீஸ் வந்ததற்கு கார்த்திக்தான் காரணம் என்று ராஜபாண்டி கருதி உள்ளார். இதனையடுத்து, சம்பவத்தன்று இரவு கார்த்திக் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த ராஜபாண்டி, அரிவாளால் கார்த்திக்கை வெட்டி கொலை செய்ய முயன்றாராம். ஆனால், கார்த்திக் தப்பி சென்றுவிடவே, வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி உள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தனர். இவர் மீது சிப்காட்டில் 7 வழக்குகளும், தென்பாகத்தில் 9 வழக்குகளும் உள்ளது. மேலும், சிப்காட் போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல், குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




