• vilasalnews@gmail.com

சொத்து விற்க உதவி கேட்டது குத்தமா... தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகள் மீது மோசடி புகார்!

  • Share on

தூத்துக்குடியில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் கிங்ஸ்டன். இவர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான 30 சென்ட் இடம் தூத்துக்குடி அருகே உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்பிக் நகர் பகுதியில் உள்ளது. இந்த சொத்தின் மதிப்பு தற்போது சுமார் ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2.5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.


இந்நிலையில், தனது தொழிலுக்கு முதலீடு செய்ய பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் தாமஸ். தனக்கு பழக்கமான தூத்துக்குடி மாவட்டம் உமரி காடு பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் அவரது நண்பர் மாதவன் ஆகியோரை அணுகி உள்ளார்.


மேலும், தாமஸ் கிங்ஸ்டன் தனது இடத்தை விற்பனை செய்து தருவதற்காக சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோருக்கு பவர் எழுதிக் கொடுத்துள்ளார்.


இந்நிலையில், பவர் எழுதிக் கொடுத்து 14 மாதங்களாக இடத்தை விற்பனை செய்யாமல் உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதையடுத்து தாமஸ் கிங்ஸ்டன் தனது இடத்திற்கான ஆவணங்களை திருப்பித் தருமாறு உமரி சத்திய சீலனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்


ஆனால், உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்தும், வாழ்நாள் உறுதிச் சான்றை போலியாக தயார் செய்து பாஜக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பெயருக்கு கடந்த மாதம் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.


இந்த மோசடி தாமஸ் கிங்ஸ்டனுக்கு தெரியவந்ததை தொடர்ந்து உமரி சத்தியசீலன், மாதவன் மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோரை அணுகி தனது இடத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து விட்டீர்கள். எனவே, அதற்கு உரிய பணத்தை தாருங்கள் எனக் கேட்டுள்ளார்.


ஆனால் அதற்கு உமரி சத்தியசீலன், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் நாங்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியாது என கூறியதுடன், உனக்கு பணத்தை தர முடியாது என்றும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.


இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தாமஸ் கிங்ஸ்டன் பத்திரப்பதிவு சார்பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு காவல்துறை உள்ளிட்டோரிடம் மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்து, மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.


மேலும், பாஜக மாநில துணைத் தலைவரான சசிகலா புஷ்பா., பாஜக நிர்வாகிகளான உமரி சத்தியசீலன், மாதவன் ஆகியோர் தமது நிலத்தை அபகரித்து விட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார்.

  • Share on

செக்காரக்குடி கிராமத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் பள்ளம்!

ரூ.3,055 செல்போனுக்கு ரூ.38,055 கிடைத்தது : தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு!

  • Share on