ஓட்டப்பிடாரத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
2025 - 2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கையில், உயர்க்கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளில் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் புதிய கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, 2025 - 2026 கல்வியாண்டில் ஓட்டப்பிடாரத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கான பணிகளில் தொகுதி எம்எல்ஏ சண்முகையாக தீவிரமாக பணியாற்றினார்.
இந்த நிலையில் தான், இன்று ( 26.5.25 ) ஓட்டப்பிடாரத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடந்தது.

கல்லூரியை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஓட்டப்பிடாரத்தில் நடந்த விழாவில், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். தொடர்ந்து, இந்த கல்வியாண்டு கல்லூரி நடைபெற இருக்கும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைந்துள்ள தற்காலிக கல்லூரி வளாக கட்டிடத்தினை பார்வையிட்டனர்.
மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாணவர்கள் கல்லூரி படிப்புக்காக திருநெல்வேலிக்கோ கோவில்பட்டிக்கோ, தூத்துக்குடிக்கோ அல்லது ஸ்ரீவைகுண்டம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
ஆகவே, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரவேண்டும் என்பது தான் அத்தொகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். இந்தநிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முயற்சியின் பலனாக, ஓட்டப்பிடாரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டு திறக்கப்பட்டு இருப்பது ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களிடையேயும், மாணவ, மாணவிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி இணை இயக்குனர், கல்லூரி முதல்வர், கோவில்பட்டி கோட்டாட்சியர் ( பொ ), ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




