ஜெர்மனியில் நடைபெறக்கூடிய உலக அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில், இந்திய அணியில் தூத்துக்குடி வீரர் சுகந்தன் தேர்வாகி விளையாட உள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய போக்குவரத்து துறையில் மேற்பார்வையாளராகவும் மற்றும் துறைமுக ஆணைய குழு உறுப்பினராகவும் பணி புரிந்து வரும் பாலகிருஷ்ணன் - சுமித்ரா பாலகிருஷ்ணன் ஆகியோர் புதல்வன் செல்வன் சுகந்தன்.
இவர் தற்போது பெங்களூரு ஜெயின் காலேஜ் ஆப் யூனிவர்சிட்டி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார். இவருடைய சகோதரி செல்வி சஹானா பிரபல உயரம் தாண்டும் வீராங்கனை ஆவார். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பயின்று வரும் இவர் தமிழகத்தின் சார்பாக தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கத்தினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வன் சுகந்தன் தென்னிந்திய அளவிலான பல்கலை கழகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் முதலிடமும் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கான இடையேயான கூடைப்பந்து போட்டியில் கர்நாடக மாநிலம் ஜெயின் கல்லூரி சார்பாக பங்கு பெற்று மூன்றாம் இடமும் பிடித்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் சிறப்பாக பங்கு பெற்று விளையாடிய சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிலிருந்து இந்திய பல்கலை கூடைப்பந்து அணிக்கான தேர்வு கொச்சினில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தன் பங்கு பெற்று இந்திய பல்கலை கூடைப்பந்து அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென் தமிழகத்திலிருந்து உலக அளவிலான பல்கலைக் கழக கூடைப்பந்து அணிக்கு இந்திய அணியின் சார்பாக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சுகந்தன். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விகாசா பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பினை முடித்து தற்போது கர்நாடக மாநிலம், ஜெயின் கல்லூரியில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்திய பல்கலை கூடைப்பந்து பந்துஅணிக்கு தேர்வு செய்யப்பட்டு, இந்த மாபெரும் சாதனை படைத்த சுகந்தன் தூத்துக்குடி மாவட்ட 16 வயதிற்குட்பட்ட தூத்துக்குடி மாவட்ட அணியை தலைமையேற்று மாநில அளவில் முதலிடம் பெற வைத்ததில் முக்கிய பங்கு ஆற்றியவர்.
இதன் மூலம் 18 வயதுக்குட்பட்ட தமிழக அணியில் இரண்டு முறை பங்கு பெற்று தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுள்ளார்.
மேலும் மத்திய அரசாங்கத்தினுடைய நேரடி கட்டுப் பாட்டினில் நடைபெறக்கூடிய கேலோ இந்தியா கூடைப்பந்து போட்டியிலும் தமிழகத்தின் சார்பாக பங்கு பெற்று தங்கப் பதக்கத்தை பெற்ற பெருமைக்குரியவர்.
இத்தகைய மாபெரும் சாதனைகளை படைத்த சுகந்தன் தற்போது இந்திய பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கு தேர்வாகி இருப்பது தூத்துக்குடி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும்.
தென் தமிழகத்திலிருந்து முதல் முறையாக இந்திய பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கு தேர்வாகியுள்ள சுகந்தனை தூத்துக்குடி துறைமுக ஆணையக் குழு தலைவர் சுசாந்தகுமார் புரோகித் மற்றும் துறைமுக செயலாளர் மற்றும் துறைமுக விளையாட்டு குழு தலைவர் மோகன் குமார், துறைமுக விளையாட்டு குழு செயலர் தமிழ்ச்செல்வன், துறைமுக ஆணையக் குழு உறுப்பினர் துறைமுகம் சத்யா மற்றும் ஏனைய துறைமுக அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து தலைவர் பிரம்மானந்தம், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் நார்டன், துணைத் தலைவர்கள் பிரேம் ஆதித்தன், ரவி, சுந்தர் மகாராஜன், பயிற்சியாளர்கள் சத்திய சங்கர், வினோத், பிரதீப், தொழிலதிபர் கிங்ஸ்டன், வக்கீல் சின்னத்தம்பி, காவல் ஆய்வாளர் வேல்ராஜ், விகாசாபள்ளி முதல்வர் சார்லஸ், துணை முதல்வர் சிறில், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், வ.உ.சி கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் பாராட்டி உள்ளனர்.
மேலும், ஜெயின் கல்லூரியினுடைய விளையாட்டுத் துறை இயக்குனர் சங்கர், பயிற்சியாளர் புனித் மற்றும் லோகேஷ் ஆகியோரும் சுகந்தனுக்கு தங்களுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்திய பல்கலைக்கழக கூடைப்பந்து அணியில் தேர்வு பெற்றுள்ள சுகந்தன் வருகின்ற 16.7.2005 முதல் 27.7.2005 வரை ஜெர்மனியில் நடைபெறக்கூடிய அகில உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணியின் சார்பாக பங்கு பெற இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




