உச்சநீதிமன்றம் கருணை மரணத்தை அனுமதித்து அளித்த தீர்ப்பை ஏற்று, தமிழகத்திலும் அதனை செயல்படுத்த வேண்டும் என தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு எம்பவர் இந்தியா நுகர்வோர் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனு:
நோயிலிருந்து குணமாக முடியாத சூழ்நிலை ஏற்படும் போது நோயாளியின் விருப்பத்திற்கிணங்க கண்ணியத்துடன் நோயாளிகள் உயிர் துறக்க வாய்ப்பளிக்கலாம் என்று 2023 ஆம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி உச்ச நீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை கேரள மாநிலம் உடனடியாக அமல்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஜனவரி 31 முதல் அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவ சிகிச்சையால் நோய் குணமாவதைக் காட்டிலும் நோயாளியின் உடல் நிலையை பெரிதும் பாதிக்கும் வாய்ப்பிருக்கும் சூழலில் இந்த உத்திரவை அமல்படுத்தலாம். இதற்காக பல்வேறு வழிமுறைகளை அண்டை மாநிலங்கள் அறிவித்துள்ளது. ஆகவே இந்த திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.



