தூத்துக்குடி முத்துநகரில் ரயிலில் ஏற முயன்ற ரயில்வே ஒப்பந்த பணியாளர் திடீரென தண்டவாளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவர் தென்னக ரயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் சொந்த ஊருக்குச் செல்வதற்காக நேற்று (ஜன.29) இரவு 8.40 மணியளவில் சென்னைக்குச் செல்லும் முத்துநகர் விரைவு வண்டியில் செல்வதற்காக ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது, ரயில் கிளம்பியுள்ளது. அதையடுத்து ரயிலில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் ஏறுவதற்காக தங்கராஜ் ரயில் பின்னால் வேகமாக ஓடி வந்து ஏற முயன்றுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் தண்டவாளத்தில் சிக்கி, ரயில் அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், உடனடியாக உடலைக் கைப்பற்றி போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



