அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட மொத்தமாக 297 வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் அதிமுக சார்பாக தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி முழுமையாக வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 3 கட்டங்களாக பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு இலவசமாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷனில் ஒரு கிலோ பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் இலவசமாக அளிக்கப்படும். அதேபோல் மாநிலங்களுக்கான மத்திய நிதி பகிர்வை உயர்த்தி வழங்க வலியுறுத்துவோம். அதேபோல் அரசு நிலங்களில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.
மகளிர் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். அதேபோல் 12வது படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த படிப்படியாக மதுக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10% உயர்த்தப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுப்படி செய்யப்படும் என்றும், மீனவர்கள் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படும் என்றும், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.