மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பூபாலன் மீது, வரதட்சணை கேட்டு தன்னை தாக்கியதாக அவரது மனைவி புகார் அளித்திருந்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
மதுரை காதகிணறு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பிரியா. இவருக்கும் காவலர் பூபாலனுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சமீப நாட்களாக வரதட்சணை தொடர்பாக தன் மீது கணவர் பூபாலன் தொடர் தாக்குதல் நடத்துவதாக தங்கப்பிரியா புலம்பி வந்திருக்கிறார்.
இதனிடையே சண்டை உச்சத்தை எட்டும்போது, கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிருக்கும் சென்றிருக்கிறார் தங்கப்பிரியா. இவ்வாறு இருக்கையில் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயத்துடன் தங்கப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்படடிருக்கிறார்.
வரதட்சணை கேட்டு தனது கணவர் காவலா் பூபாலன் தன் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்திருக்கிறார். பூபாலனுக்கு, அவரது தந்தை செந்தில்குமரன், தாய் மற்றும் சகோதரி ஆகியோர் ஆதரவாக இருப்பதாகவும், தன் மீதான தாக்குதல் குறித்து எத்தனை முறை முறையிட்டும் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்றும் தங்கப்பிரியா போலீசுக்கு அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பூபாலனை கைது செய்ய போலீசார் முயன்ற போது அவர் தலைமறைவானார். இதனையடுத்து தற்போது பூபாலன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.



