கொரோனா தடுப்பு முறைகளை ஜனவரி 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு, தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநிலங்களுக்கு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளுடன் கூடிய கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய ஊரடங்கில் நடைமுறையில் இருந்த மெட்ரோ ரெயில் சேவை, கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி, திரையரங்குகள் செயல்பட அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயல்பட அனுமதி உள்பட அனைத்தும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவது போன்ற காரணங்களால், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடைபிடிக்கும் நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.



