தூத்துக்குடியில் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (22.11.2025) பிற்பகல் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்று பிற்பகல் 6 மணி நிலவரப்படி, மருதூர் அணைக்கட்டில் 8.5 அடியும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் 6.5 அடியும், கோரம்பள்ளம் அணைக்கட்டில் 1.9 மீட்டரும் நீர்மட்டம் உள்ளது.
கோரம்பள்ளம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் 01 கண் திறக்கப்பட்டு சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம் பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.



