தூத்துக்குடி மாவட்டம், கோவிப்பட்டியில் சொத்து பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த சொத்துக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய புகாரில் வருவாய் உதவியாளர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஊரணி தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி காளீஸ்வரி. காளீஸ்வரியின் தந்தை துரை கண்ணன் தனது மகள் காளீஸ்வரி பெயருக்கு சொத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு எழுதி கொடுத்துள்ளார். அதன் படி காளீஸ்வரி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு காளீஸ்வரியின் கணவர் செல்வக்குமார் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உள்ளார்.
அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் நவீனா ( 29 ) என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் இது தொடர்பாக புகார் அளித்தார் .
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, எஸ்.ஐ. தளவாய் மற்றும் சுந்தரவேல், பாண்டி, கோமதி, முத்து, ஷியாம் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு வந்து மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
மேலும், செல்வகுமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் 10 ஆயிரத்தை வருவாய் உதவியாளர் நவீனா, நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவு அறையில் வைத்து செல்வகுமாரிடமிருந்து பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது வருவாய் உதவியாளர் நவீனா கண்ணீர் விட்டு அழுதார். லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை தலைமையிலான போலீசார் நவீனாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



