சட்டசபை தேர்தலின் போது அதிமுகவினரை தாக்கிய வழக்கு விசாரணைக்காக தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் நேற்று ( ஜூன் 6 ) ஆஜரானார்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக தற்போதைய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.
அப்போது வாக்கு சேகரிக்க அனிதா ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். இந்தநிலையில், அப்பகுதியில் அதிமுக தேர்தல் காரியாலயத்தில் இருந்தவர் இரட்டை இலை சின்னத்தை விரலால் காண்பித்துள்ளார். இதனை அடுத்து அப்போதைய திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ் உட்பட திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள், அதிமுகவை சேர்ந்த தாமோதரன், அரசகுரு மற்றும் சிலரை சரமாரியாக தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து தாமோதரன் 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ், அந்தோணி, சந்தனராஜ், பாலகிருஷ்ணன், ரமேஷ், மாரிமுத்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி ஜே.எம்.கோர்ட் எண் 1 ல் நடைபெற்றது வந்தது. இவ்விழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ( ஜூன் 6 ) கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதி சுமதி விசாரித்து விசாரணையை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.




