திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்குவதால், இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும், விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாட்களில் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இத்தகைய இன்றைய தினம் ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்தநிலையில், ரூ.100 கட்டண தரிசனம் வரிசையில் நின்று காத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் ( 50 ) என்ற பக்தர் திடீரென மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளார். பின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருந்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.




