தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி செயலர்களும் இன்று ( மார்ச் 12) ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
முறையான கால முறை சம்பளம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசு சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி, அரசாணை வெளியிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று ( 12ம் தேதி ) தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி செயலர்களும் ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இன்றைய தினம் கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மேலும், வரும் ஏப்ரல் 4ஆம் தேதி சென்னை ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில், ஊராட்சி செயலர்கள் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தவும், ஏப்ரல் 21ஆம் தேதி முதல் சென்னை ஊரக வளர்ச்சித் துறை ஆணையரகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தவும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர்.
ஆகவே, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அனைத்து ஊராட்சி செயலர்களும் ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவதால், கிராம ஊராட்சி மன்ற அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், குடிநீர் வினியோக பணிகள், அரசு நலத்திட்ட பணிகள் என பல்வேறு பணிகளுக்காக கிராம ஊராட்சி மன்ற அலுவலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வீட்டுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்படலாம்.



