தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பட்ஜெட் விளக்க கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் துணைத் தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு தூத்துக்குடி தொழிலதிபர்களுக்கு பட்ஜெட் பற்றிய விளக்கத்தை எடுத்துரைத்தனர்.

பின்னர், இந்நிகழ்ச்சி முடிந்ததும் 5 வது மாடியில் இருந்து லிப்டில் கீழே இறங்கி வரும் போது லிப்ட் திடீரென இடையில் நின்றது. அதில் 6 பெண்கள் உட்பட 11 பாஜக நிர்வாகிகள் மாட்டிக்கொண்டனர். இதனையடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிக எண்ணிக்கையிலான நபர்கள் லிப்டில் ஏறியதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இதே போல தான், சில தினங்களுக்கு முன்பு கடலுார் தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஷ்ணு பிரசாத் வடலுாரில் நடந்த கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார். பின்னர் அங்கிருந்த விடுதி லிப்டில் அவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் இரண்டாம் தளத்துக்கு சென்றனர். அப்போது லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்று விட்டது. இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, விடுதி ஊழியர்கள், அவசர கால சாவியை பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அது பயனளிக்காததைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லிப்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கதவை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர்.
மூன்று பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய லிப்டில் 6 பேர் சென்றதே, லிப்ட் பழுதாகி நின்றதற்கு காரணம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிட தக்கது.



