மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்தினை நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 12.12.2024 அன்று பெய்த பெரு மழையினால் கயத்தாறு, கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய வட்டங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் பெரும் சேதமடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று என வலியுறுத்தியுள்ளார்.
அப்போது, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனி சக்தி ராமச்சந்திரன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபதி, கசல் பூமி வரதராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



