<p><b>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை நேரிட்ட பயங்கர வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</b></p><p><br></p><p>பாண்டவர்மங்கலம் துரைசாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை, செண்பகனேரி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை சுமார் 8 மணி அளவில், வழக்கம்போல் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மருந்துகள் உராய்ந்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.</p><p><br></p><p>இந்த விபத்தில் தொழிற்சாலை கட்டிடம் பலத்த சேதமடைந்தது. விஜயாபுரி சமத்துவபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (27),, சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><br></p><p>இடிபாடுகளில் சிக்கி பலத்த தீக்காயமடைந்த கணேசன் மற்றும் சுடலைமுத்து இருவரும் மீட்கப்பட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><br></p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், மேற்கொண்டு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>