<p><b>தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றுடன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி எனப் பலமுனைப் போட்டி நிலவும் நிலையில், தேமுதிகவும் தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.</b></p><p><br></p><p>தேமுதிக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. முன்னதாக, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 12-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, மனுக்களை வழங்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.</p><p><br></p><p>இதன் மூலம், விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்ரவரி 15-ம் தேதி மாலை 4 மணி வரை தங்களது மனுக்களைத் தலைமை அலுவலகத்தில் வழங்கலாம். பொதுத் தொகுதிகளுக்கு ரூ.15,000, தனித் தொகுதிகளுக்கு ரூ.10,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. </p><p><br></p><p>கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி மற்றும் நவமி திதிகள் வந்ததால், கட்சி அலுவலகத்தில் மனுக்கள் வாங்க ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது சமூக வலைதளங்களில் விவாதமானது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய கட்சி நிர்வாகிகள், சுப காரியங்களுக்குத் தடைக்காலமாக கருதப்படும் அஷ்டமி, நவமி நாட்களைத் தவிர்த்துவிட்டு மற்ற நாட்களில் தொண்டர்கள் ஆர்வத்துடன் மனுக்களைப் பெற்று வருகின்றனர் என விளக்கம் அளித்துள்ளனர்.</p><p><br></p><p>இன்று கடைசி நாள் என்பதால் பிரேமலதா விஜயகாந்த் அவர்களே நேரில் வந்து தனது விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த கால நீட்டிப்பு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தேமுதிகவின் இந்த அடுத்தகட்ட நகர்வு அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>