<p><b>ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கேரளாவைச் சேர்ந்த சிறுமிகள் 2 பேர் உயிரிழப்பு.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது, கேரளாவைச் சேர்ந்த அக்காள் மற்றும் தங்கை ஆகிய இரு சிறுமிகள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p><br></p><p>தேனி மாவட்டம் பங்களாமேட்டைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (45). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். தனது குலதெய்வக் கோவில் விழாவிற்காகக் குடும்பத்தினருடன் ஒரு வேனில் தூத்துக்குடி வந்திருந்தார்.&nbsp; திருச்செந்தூர் செல்லும் வழியில், ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோவிலுக்கு வந்த அவர்கள், அங்கிருந்த தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.</p><p><br></p><p>அப்போது சந்திரகுமாரின் மகள்களான அபிநயா (16) மற்றும் மீனாட்சி (12) உட்பட 4 சிறுமிகள் ஆற்றின் ஆழமான பகுதியில் இறங்கியதால் நீரில் மூழ்கித் தத்தளித்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை சந்திரகுமார் நீரில் குதித்து அவர்களை மீட்க முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுமிகளும், சந்திரகுமாரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.</p><p><br></p><p>நீண்ட தேடுதலுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் அபிநயா மற்றும் மீனாட்சியைப் பிணமாக மீட்டனர். ஏரல் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தந்தையின் கண் முன்னாலேயே இரண்டு மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>