<p><b>இந்த ஆண்டு தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 28ம் தேதி சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், ஜனவரி 29ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.</b></p><p><br></p><p>தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்றும் சந்ததிகளுக்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும் பித்ரு தோஷம் நீங்கவும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்படுகிறது.</p><p><br></p><p>இந்த நாளில் புண்ணிய தீர்த்தங்கள், நதிகள், ஆறுகள் மற்றும் கடல் போன்ற பகுதிகளில் நீராடி விரதம் இருந்து பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். மேலும் வீடுகளிலும் முன்னோர்களுக்கு படையில் இட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.</p><p><br></p><p>ஒவ்வொரு ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள புண்ணிய தீர்த்த தளங்களுக்கு சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.</p><p><br></p><p>அந்த வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கும் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க வருகை தருவர். இதற்காக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br></p><p>பக்தர்களின் வசதிக்காக ஜனவரி 28ம் தேதி சென்னை, கிளாம்பாக்கம், சேலம், கோவை மற்றும் பெங்களூருவில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 29ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கிளாம்பாக்கம், கோவை, சேலம், பெங்களூருவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>