<p><b>தூத்துக்குடி போல்பேட்டை நியாயவிலைக்கடையில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.</b><br></p><p>தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.</p><p>தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 7-ந் தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவில் முதல் கையெழுத்தை போட்டார். இதையடுத்து கொரோனா நிவாரண உதவி வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக இந்த மாதம் ரூ.2 ஆயிரமும், அடுத்த மாதம் மீதி ரூபாய் ரூ.2 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ரே‌ஷன் கடைகளில் முற்பகல் நேரத்தில் மட்டும் இந்த பணத்தை வழங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>டோக்கன் வினியோகம் செய்து, அதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களை வரவழைத்து கொரோனா நிவாரண தொகையை வழங்க திட்டமிட்டனர். அதன்படி&nbsp; ரூ.2 ஆயிரம் நிவாரண உதவிக்கான டோக்கன்கள் கடந்த 10-ந் தேதி முதல் வழங்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.</p><p>இதன் பின்னர் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்றது. நாள் ஒன்றுக்கு தலா 200 குடும்பத்தினர், நிவாரண தொகை பெறும் வகையில்&nbsp; டோக்கன்களை ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர்.</p><p>அதனைத்தொடர்ந்து இன்று 15-ந் தேதி (சனிக்கிழமை) முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படுகின்றன.</p><p>அதன்தொடர்ச்சியாக, தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள நியாயவிலைக்கடையில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.</p><p>இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், ஆனந்தசேகரன், ஜீவன் ஜேக்கப் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>