<p><b>வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு வைப்பாரில் 5-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில், மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஐந்தாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.</p><p><br></p><p>வைப்பார் ராஜ கம்பள மகாஜன சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பந்தயத்தில், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களான மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் கலந்து கொண்டன.</p><p><br></p><p>2026-ஆம் ஆண்டின் முதல் லட்ச ரூபாய் மாட்டுவண்டி பந்தயம் இது என்பதால், பந்தயக் களம் ஆரம்பம் முதலே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இந்த வீர விளையாட்டைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வைப்பாரில் குவிந்தனர். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள், சீறிப்பாய்ந்த காளைகளையும் அவற்றை லாவகமாக ஓட்டிச் சென்ற சாரதிகளையும் ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர்.</p><p><br></p><p>கடுமையான போட்டிக்கு இடையே இலக்கை எட்டி வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், திறமையாக வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் எல்.இ.டி (LED) டிவி மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழைப் போற்றும் வகையில் அமைந்த இந்த நிகழ்ச்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.</p><p><br></p>