<p><b>தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கணினி பட்டாவினை வழங்கினார்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி டூவிபுரம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (12.03.2025) தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்  பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவினை வழங்கினார்.</p><p><br></p><p><b>இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது:-</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வசிக்கக்கூடிய 11 ஆயிரம் பேருக்கு தனிப்பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடியிருப்பவர்கள் தனிப்பட்டா வழங்குவதற்காக கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 151 பேருக்கு இன்று பட்டாக்கள் வழங்கப்படுகிறது.</p><p><br></p><p>நத்தம் புறம்போக்கில் உள்ள 11 ஆயிரம் உரிமையாளர்களிடம் விரைவில் மனு பெறப்படும். இலவச வீட்டு மனை பெற்று குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெயர் திருத்தம், பெயர் மாற்றம், போன்றவற்றை இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்து அதனை பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் ஹவுசிங் போர்டு பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p><br></p><p>அதேபோல் 10 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருந்து குறிப்பிட்ட வருமானத்துக்குள் உள்ள ஏழை மக்களுக்கு அதை வரன்முறை செய்து கொடுப்பதற்கு நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவு கொடுத்து இருக்கிறார்கள். </p><p><br></p><p>மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு சிறப்பு அரசு ஆணையின் மூலம் இது போல் குடியிருக்கும் நம்முடைய தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து நீங்கள் மனு கொடுத்துள்ளீர்கள்.</p><p><br></p><p>இந்த மாதிரி இருக்கும் மனுக்களை எல்லாம் நீங்கள் இ சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்து அதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். குடியிருக்கும் வீட்டுக்கு கணினி பட்டா வழங்குவதற்கு நாங்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.</p><p><br></p><p>இது போன்று பொதுமக்கள் கணினி பட்டா பெறுதல், பெயர் மாற்றம், பெயர் திருத்தம் போன்றவற்றிகான நடைமுறைகளை எளிமையாக்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். </p><p><br></p><p>இந்த கணினி பட்டா வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  பி.கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்தார்.</p><p><br></p><p>இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, தூத்துக்குடி வட்டாட்சியர் முரளி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர்கலந்துகொண்டனர்.</p><div><br></div>