<p><b>பசுவந்தனை அருகே தனியார் நிறுவனத்தில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 1000 மீட்டர் காப்பர் வயர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள எவர் கிரீன் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற சோலார் நிறுவனத்தில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள சுமார் 1000 மீட்டர் காப்பர் வயர் கடந்த 26.01.2024 அன்று இரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக அங்கு பணியாற்றி வரும் பொறியாளர் அஜித் என்பவர்&nbsp; (14.02.2024) அன்று கொடுத்த புகாரின்பேரில் பசுவந்தனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்&nbsp; மார்த்தாண்ட பூபதி வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><p>இந்நிலையில் பசுவந்தனை காவல் ஆய்வாளர் முத்துமணி, உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் போலீசார் மேற்படி திருட்டு சம்மந்தமாக தேடி இன்று காலை போல்நாயக்கனூர் தாண்டி உள்ள காற்றாடி பாதை அருகில் வந்தபோது,&nbsp; இருசக்கர வாகனத்தில் முன்பக்கத்தில் வெள்ளை நிற பையுடன் வந்தவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது, அவர் கீழமுடிமண் காலனி தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ராமமூர்த்தி (22/24) என்பதும், அவர் மேற்படி வயர் திருடியதையும், திருடிய காப்பர் வயரை உருக்கி 25 கிலோ செம்புக்கம்பியாக வைத்திருந்ததை ஒப்புக்கொண்டு விசாரணையில் தெரிவித்ததையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள மேற்படி செம்புக்கம்பி மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின் மேற்படி நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.</p>