<p><b>ஸ்ரீவைகுண்டம் அருகே அ.தி.மு.க., பிரமுகர் பிச்சையா கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி கிராமத்தில், புதுமனை தெற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா. இவர் அ.தி.மு.க., கிளைக்கழக செயலாளராக இருந்தார். ஊர்தலைவராகவும் இருந்து வந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.</p><p>கடந்த 2015 ஆம் ஆண்டு, கிராமத்தில் உள்ள இந்திரா நினைவு குடியிருப்பு பகுதியில் வந்த போது, பிச்சையாவை மறித்து வெட்டினர். சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.&nbsp;</p><p>பிச்சையா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது உறவினர்கள், அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்த மற்றொரு தரப்பினர் வீடுகள் மீது கல்வீசி தாக்கினர். டீக்கடைகள் சூறையாடப்பட்டன. கலவரம் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>இதனைத்தொடர்ந்து, இந்த கொலை தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.&nbsp;</p><p>இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பு கூறினார். அதில் அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ், ராபின், ரவி, அன்பு பட்டுராஜ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.&nbsp;</p>