<p><b>விஜயகாந்துக்கு என்ன நடந்தது என்பதையே மறைத்துவிட்டார்கள் என நடிகர் மன்சூர் அலிகான் கண்ணீர் மல்க தெரிவித்தார்.</b></p><p>தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் கடந்த மாதம் 28ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாக விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.</p><p>அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.</p><p>சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் நடிகர்கள் சிவக்குமார், கமல்ஹாசன், சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், விக்ரம், ஜெயம் ரவி, சத்யராஜ், பார்த்திபன், விஜய் ஆண்டனி, ரகுமான், பொன்வண்ணன், ஆனந்தராஜ், பசுபதி, ராஜேஷ், சின்னி ஜெயந்த், மன்சூரலிகான், எம்எஸ் பாஸ்கர், விக்னேஷ், ரவி மரியா, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீமன், ரெடின் கிங்ஸ்லி, நடிகைகள் லதா, அம்பிகா, ராதா, சரண்யா, சிம்ரன், ரேகா, தேவயானி, காயத்ரி ரகுராம், ரித்விகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/01/20/31705751142.jpg" style="width: 100%;"><br></p><p>விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன், மைத்துனர் சுதீஷ் மற்றும் திரையுலகத்தைச் சார்ந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.</p><p>இதில், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டவர்களும், இன்றைய இளம் கதாநாயகிகள் பலரும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்&nbsp; விஜயகாந்த் குறித்து தங்களுக்கு தெரிந்த கருத்துகளை தெரிவித்தனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/01/20/21705751142.jpg" style="width: 100%;"><br></p><p>அந்த வரிசையில் நடிகர் மன்சூர் அலிகான் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். கேப்டன் இறந்த போது கவலை தோய்ந்த முகத்துடன் அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தை விட்டு எங்கும் செல்லாமல் நீண்ட நேரமாக இருந்தவர் மன்சூர் அலிகான்.</p><p>அப்படிப்பட்ட அவர் பேசுகையில், விஜயகாந்த் நிஜத்திலுமே மாமனிதனாக வாழ்ந்தவர். கேப்டன் உடல்நலம் மோசமான போதே நானெல்லாம் செத்து போய்ட்டேன். விஜயகாந்த் உடல்நலம் மோசமானதுக்கு என்ன ட்ரீட்மென்ட், என்ன ஏதுன்னு எந்த விவரமும் சொல்லப்படலை.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/01/20/11705751142.jpg" style="width: 100%;"><br></p><p>அதுல சில மன வருத்தங்கள் எனக்கு இருக்கின்றன. அதை பற்றி நான் இங்க பேசலை. ஆனால் என்னால் தாங்க முடியவில்லை. அத்தனை வேதனையா இருக்கு என தெரிவித்திருந்தார். இது அங்கிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாகியது. விஜயகாந்தின் மகன்களும் மனைவியும் அவரை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்ட நிலையிலும் அவர் குறித்து இப்படி பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>