<p><b>தூத்துக்குடியில் மத்திய அரசு ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட&nbsp; 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 3பேரை தேடி வருகின்றனர்.</b><br></p><p>தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகே உள்ள கனநீர் ஆலை குடியிருப்பு வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (33). இவர், அப்பகுதியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் முத்தையாபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவர் ஒருவர், கிருஷ்ணா நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டுள்ளார்.&nbsp;</p><p>அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு சென்ற போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பதுங்கியிருந்த மேலும் 5பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர். அவரிடம் இருந்த நகை, பணத்தை பறித்ததுடன், கூகுள் பே மூலம் வங்கி கணக்கில் இருந்த ரூ.1லட்சத்தையும் எடுத்துள்ளனர்.&nbsp;</p><p>இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் முத்தையாபுரம் மற்றும் அதன்சுற்று பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.</p>