<p><b>தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் வெளித் துறைமுகத் திட்டம் மற்றும் பாரத் சரக்குப் பெட்டக கப்பல் சேவை நிறுவனத்திற்காக ரூ.15,000 கோடி மதிப்பிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.</b></p><p><br></p><p>தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், இந்தியாவின் கடல்சார் உட்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் இரண்டு மிக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.</p><p><br></p><p>வெளித் துறைமுகத் திட்டத்திற்கான நிதி ஏற்பாடு (Outer Harbor Project) வ.உ.சி. துறைமுகத்தின் வெளித் துறைமுகத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே நிதிக் கழகம் (IRFC) மற்றும் சாகர்மாலா நிதிக் கழகம் (SMFCL) ஆகியவற்றுடன் முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><br></p><p>இத்திட்டத்திற்காக அதிகபட்சமாக ரூ.15,000 கோடி வரை கூட்டு நிதி ஏற்பாடுகளை செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.  'Hybrid Annuity Model' (HAM) முறையில் அலைத் தடுப்புச் சுவர் கட்டுதல், ஆழப்படுத்தும் பணிகள் மற்றும் நில மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படும்.</p><p><br></p><p>இக்கூட்டு முயற்சி நிதி ஆதாரங்களை அடையாளம் காணுதல், திட்டத்தைச் செயல்படுத்துதல் மற்றும் அறிவுப் பகிர்வு மூலம் 'கடற்சார் பார்வை 2030' மற்றும் 'பிரதமரின் கதி சக்தி' திட்டங்களை விரைவுபடுத்த உதவும்.</p><p><br></p><p>பாரத் சரக்குப் பெட்டக கப்பல் சேவை நிறுவனம் (BCSL) மத்திய அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 'பாரத் சரக்குப் பெட்டக கப்பல் சேவை நிறுவனத்தில்' (BCSL) வ.உ.சி. துறைமுகம் ஒரு முக்கிய பங்குதாரராக இணைந்துள்ளது.</p><p><br></p><p>ஏற்றுமதி-இறகுமதி (EXIM) மற்றும் உள்நாட்டு கடல்சார் வர்த்தகத்திற்காக கப்பல்கள் மற்றும் சரக்குப் பெட்டகங்களை வாங்குதல், பராமரித்தல் மற்றும் வாடகைக்கு விடுதல் போன்ற பணிகளை இந்த நிறுவனம் மேற்கொள்ளும்.</p><p><br></p><p>இந்திய கப்பல் கழகம் (SCI), இந்திய சரக்குபெட்டக கழகம் (CONCOR), சாகர்மாலா நிதிக் கழகம் (SMFCL), ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் சென்னை துறைமுக ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த முயற்சி 2026-27 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சரக்குப்பெட்டக உற்பத்தி உதவித் திட்டத்துடன் (CMAS) ஒத்திசைந்து செயல்படும்.</p><p><br></p><p>மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்  சர்பானந்தா சோனோவால் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வ.உ.சி. துறைமுகத்தின் சார்பில் அதன் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கையெழுத்திட்டார்.</p><p><br></p><p>இந்தச் சாதனைகள் வ.உ.சி. துறைமுகத்தை உலகத் தரம் வாய்ந்த நவீன துறைமுகமாக மாற்றுவதுடன், 'Maritime Amrit Kaal 2047' மற்றும் 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) ஆகிய இலக்குகளை அடைய வலுவான அடித்தளமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>