<p><b>கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்கியதில் நடந்த முறைகேடு காரணமாக, பேரூராட்சி முன்னாள் உதவி இயக்குநர், நிர்வாக அதிகாரி உட்பட மூன்று பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பேரூராட்சியில் கடந்த 2017 - 18 ஆம் ஆண்டு நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் உஷா ( 54 ). தற்போது ஆறுமுகநேரி பேரூராட்சி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.&nbsp;</p><p><br></p><p>2017 - 18 ஆம் ஆண்டில் டெங்கு தடுப்பு பணிக்காக கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது முறையாக டெண்டர் நடைமுறைகளை கடைபிடிக்காமல், சென்னையில் உள்ள பழனிவேலு ( 48 ) என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து, அப்போதைய நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர் ( 57 ) உதவியுடன் கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை வாங்கியுள்ளனர்.</p><p><br></p><p>ரூ. 2,60,000 மதிப்பிலான இயந்திரத்தை, ரூ. 5 லட்சத்து 75 ஆயிரத்து 604 என்ற விலையில் போலி ஆவணங்கள் வைத்து வாங்கினர். இதன் மூலம் எட்டயபுரம் பேரூராட்சிக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 604 நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><br></p><p>இதுகுறித்து வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரிடம் இருந்து பெறப்பட்ட குறிப்பாணை அடிப்படையில், உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், நிர்வாக அதிகாரி உஷா, பழனிவேல் ஆகிய மூன்று பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>